இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

வாழ்க்கைத் துணை தேர்வு

Thai flower garland for Thai wedding ceremony Stock Photo - 17533414
ஆரோக்கியமான ஒரு சமூகக் கட்டமைப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கைத் துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.. வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் எத்தனையோ அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும் பருவ வயதையடைந்தவர்கள் வெறும் புறக்கவர்ச்சியில் மயங்கி எதிர்கால மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றனர். சமூகத்தின் சீரழிவுக்கும் காரணமாகின்றனர்.
    மோகமும் காமமும் முற்றியிருக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணையின் கோபமும் கூட கவர்ச்சிகரமானதாகத் தோற்றமளிக்கும். சில மாதங்களில் எதார்த்த நிலைக்கு வந்த பிறகுதான் எத்தனையோ விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டோம் என்ற உண்மை உறைக்கும். வாழ்க்கை முழுவதும் நரகமாகி விட்டதை அப்போது தான் உணர்வார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தொலைத்த பலரை நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.
    குறிப்பாக இளம்பெண்கள் இத்தகைய இனக்கவர்ச்சிக்கு வசப்பட்டுவிட்டால் ஆண்களால் ஏமாற்றப்பட்டு கர்பிணிகளாக்கப்பட்டு கைவிடப்படுகின்றனர். சிலவேளை சிவப்பு விளக்குப் பகுதியில் கூட விற்கப்படுகின்றனர்.
   இந்த இனக்கவர்ச்சியில் மயங்காமல் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு நடப்பது எப்படி? இதை வென்றெடுக்கும் வழி என்ன?
இதற்குத்தான் தெளிவான முறையில் இறைவன் தனது திருமறை மூலமும் திருத்தூதர்  மூலமும் வழிகாட்டுகிறான். இறைநம்பிக்கையை முக்கிய  அளவுகோலாகக் கூறுகிறான் இறைவன். 
    'இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்! இறைநம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
    உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
    (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லது இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.'  (அல்குர்ஆன் 24:3)
= நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
."நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1.
அவளது செல்வத்திற்காக
2.
அவளது குடும்பத்திற்காக
3.
அவளது அழகிற்காக
4.
அவளது மார்க்கத்திற்காக
மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள்.''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி 5090)
மார்க்கம் என்றால் இறைவனின் கட்டளைகளைப் பேணி வாழும் பண்பைக் குறிக்கும்.
    இந்த உலக வாழ்க்கையோடு எல்லாம் முடிந்து விடுகிறது என்ற எண்ணம்தான் எப்படியாவது இந்த உலகத்தை அனுபவித்து விடத் தூண்டுகிறது. சிந்தனைக்குத் திரை போடுகிறது. இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கு வரும். ஒரு கட்டத்தில் இந்த உலகம் அழியும். அழிந்த பின் அனைவரும் இறைவன் முன்பாக நிறுத்தப்படுவோம். அவரவர் செய்த நன்மை தீமைகளின் அடிப்படையில் சொர்க்கமோ நரகமோ பெறுவார்கள் என்பதை யார் உறுதியுடன் நம்புகிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த இனக்கவர்ச்சியை வெல்ல முடியும்.
    இந்த நம்பிக்கையையூட்டி நமது சந்ததிகளை வளர்ப்பதால் மட்டுமே இன்று மக்கள் அனுபவித்துவரும் விபரீதங்களில் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்.

‘மனிதன் யாரை நேசிக்கிறானோ அவனுடன் தான் மறுமையில் இருப்பான்’  என்பது நபிமொழி. எனவே தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விடயத்தில் இறைவழிகட்டுதலை ஏற்று செயல்பட்டால் இவ்வுலகில் இல்லறத்தில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து பாதுகாப்பும் பெறலாம் மறுமையில் மோட்சத்தையும் அடையலாம்.
------------------ 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக