இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்


இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.
= பிறப்புரிமை:
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் முதல் உரிமை பிறப்பதற்கான உரிமை. பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது.  அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:
 'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)
= கற்கும் உரிமை:
கல்வி கற்பதற்கான உரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதை கடமையாக்கியது இஸ்லாம். “அறிவைத் தேடுவது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாகும்” என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார் நபிகள் நாயகம்(ஸல்). அன்னாரின் துணைவியார் ஆயிஷா அம்மையார் மாபெரும் மார்க்க மேதையாக திகழ்ந்தார் என்பதை நபிமொழி பதிவுகள் சான்று கூறுகின்றன.
 
=   மானிட சமன்பாடு :
பெண்கள் மனித இனமா, பெண்களுக்கு ஆன்மா உண்டா என்றெல்லாம்  பிற சமூகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆண்களும் பெண்களும் சமமே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம். அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம்.
 'மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (திருக்குர்ஆன் 4:1)

= ஆன்மீக அந்தஸ்து:
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம அந்தஸ்த்தையும்  உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
33:35. நிச்சயமாக இறைவனுக்கு கீழ்படியும் ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
= பொருளாதார உரிமை:
பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
 'இறந்து போன பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருட்களில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (திருக்குர்ஆன் 4:7)
= பொருளீட்டும் உரிமை:
ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தை இஸ்லாம் முன்வைத்தது.
 'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32)
=    ஆளுமைக்கு மதிப்பு:
ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் தீயபழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன் அரபு சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இஸ்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.
 'விசுவாசம் கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)

 
=    திருமண சீர்திருத்தம் :
இஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது.  இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.
- மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)
= ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
 =    விவாகரத்து உரிமை:  
இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது.
= சாட்சி கூறும் உரிமை:
பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.
'... கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..'' 
                           - திருக்குர்ஆன் 2: 282
 =  கனிவோடு நடத்த கட்டளை:
பெண்களுடன் அன்பாகவும், கனிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
 =    மானத்திற்கு பாதுகாப்பு:
பெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது.
 'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்'. (திருக்குர்ஆன் 24:4)
= ஹிஜாப் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆடை ஒழுக்கம்..
பெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் விடயமே ஹிஜாப். அவளை கடைசரக்காகவும் காட்சிப்பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரண்தான் இது. இஸ்லாம் வழங்கிய  உரிமைகளை பூர்த்தி செய்யும் முகமாக அவள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும் இன்ன பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவளது காரியங்களை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுப்பதே ஹிஜாப் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
     இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே அதற்காக அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்காக யாரும் பரிந்து கூட பேச முன்வராத காலத்தில் அவளது உரிமைகளை உணர்த்தியது. ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்தது.
இவற்றை எல்லாம் மீறிய இன்னொன்றையும் கவனியுங்கள்...
= எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையும் நம் கடமை!
 இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் உரிமையை மட்டுமல்ல  ... எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையையும் கூட பேண வலியுறுத்துகிறது இஸ்லாம்! போரில் எதிரி நாட்டோடு எப்படியும் அணுகலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற எந்த வரம்பும் வரையறுக்கப்படாத காலகட்டத்தில் ‘இல்லை இல்லை இப்படித்தான் அணுகவேண்டும்’ என்று யுத்த தர்மங்களை அறிமுகப்படுத்தியது இஸ்லாம். அங்கு போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
   
இது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)
        ஒரு  போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்?' என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்..

ஆம், எதிரிகளை வெல்வது அல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக அவர்களை சீர்திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. எனவே அவர்களுக்கு இறைவன் பூமியில் வழங்கிய உரிமைகளை அவர்கள் எதிரிகள் என்ற காரணத்துக்காக மீறுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதுதான் இஸ்லாம்!
அனைவரையும் படைத்து பரிபாலித்துவரும் அளவற்ற அருளாளன் அருளிய மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இல்வாழ்க்கை இனிதாக...

Related image
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 
என்கிறது வள்ளுவனின் குறள்.
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர்.
  செய்யுள்களிலும் கவிதைகளிலும் வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால் அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும். நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது தெளிவு..
முறையான இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்  
மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வருவதன் விளைவாக  மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது. 
 நபியே நீர் கூறுவீராக! இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
இவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை  இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.
இந்த அடிப்படையை அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.

அவ்வாறு அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை. 
-------------------- 
இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html


வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்


ஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர்  திருமணம்  செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள்.  அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)
இங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர்மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு  பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.
துறவறம் கூடாது :
அதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற பாலியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.
இறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)
 அவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :
திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.
அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)
தகாத உறவுகளுக்குத் தடை
திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே! காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே! இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்!
வரம்பு மீறுவோரின் நிலை
இறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே!
99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.
எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக  செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?