இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஜனவரி, 2013

குற்றவாளிகள் யார்? – கழுகுப்படை ஆய்வு!


அண்மையில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து பற்பல அலைகள் நாட்டில் எழுந்துள்ளதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம். ஒவ்வொருவரும் தனக்கு எது குற்றமாகத் தெரிகிறதோ அதைச் செய்தவர்களை அல்லது அதற்குக் காரணமாக இருப்பவற்றை நோக்கி விரல் நீட்டுகிறார்கள், வசை பாடுகிறார்கள். இவர்களில் யார் சரி? யார் தவறு? என்பது இன்னும் முடிவு செய்யப் படாமல் தொடர்கிறது.
உண்மை அறிய எங்கள் கழுகுப்படை அந்த சம்பவம் நடக்கப் போவது அறிந்து உடனே களத்தில் இறங்கியது. அந்த பஸ்ஸை நெருங்குவதற்குள் அந்த சம்பவம் நடந்துவிட்டிருந்தது. 
அந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த அறுவரையும் பேட்டி கண்டாம்..
‘ஏன் நீங்கள் இதைச் செய்தீர்கள்?’
கேள்வியைக் கேட்டதுதான் தாமதம். பதில்கள் சரமாரியாக வந்து விழுந்தன.
= நாங்கள் இளைஞர்கள். எங்களுக்கு எங்கள் உணர்வுகளைத் தீர்க்க வேண்டும் என்று தோன்றியது. அதற்கான சூழ்நிலை அமைந்து வந்ததால் அவ்வாறு செய்தோம்.
= பெண் என்பவள் ஆணின் இச்சையைத் தீர்க்கத்தானே படைக்கப் பட்டிருக்கிறாள். அவளாகவே இணங்கியிருந்தா விபரீதமான ஏதும் நிகழ்ந்திருக்காது.
= அந்தப் பெண்ணின் ஆடை எங்களைத் தூண்டியது. அவ்வளவு செக்ஸியாவா டிரெஸ் உடுத்துவது. அதுவே எங்களை அழைப்பது போல இருந்துச்சு . அழைப்பை ஏற்றது  தப்பா சார்?
= அவள் வேறு ஒரு பையன்கூட  கொஞ்சும்போது எங்களுக்கும்  இணங்கினா என்ன தப்பு சார்?
= டேக் இட் ஈசி சார், இது என்ன நாட்டில நடக்காத ஒண்ணா? ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறதுதானே!
= நாட்டில பரவலா சினிமாவிலும் டிவியிலும் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் தினமும் ‘டெமோ’ செய்து காட்டுகிறாங்களே அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? என்ன கேள்வி சார் இது?
= சின்ன வயசுலே இருந்து தேக்கி வெச்ச ஆசைகளை பின்னே எப்போதுதான் நிறைவேற்றுவது?
நாம் அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
ஏம்பா, ஏன் அடுத்தவன் பெண்ணை நாடுகிறீர்கள்? இந்த வயதில் திருமணம் செய்து விட்டு அமைதியாக அனுபவித்து விட்டுப் போகவேண்டியதுதானே!”
அதற்கும் முண்டியடித்துக் கொண்டு பதில் சொன்னார்கள் அவர்கள்.
= இந்த விலைவாசியில் கல்யாணமா? யோசிக்கவே முடியாதே!
= பொண்ணுக எல்லாம் வேலைக்குப் போறாங்க. படிப்பு ஜாஸ்த்தி. திமிர் ஜாஸ்த்தி. அவங்களுக்கு அடங்கி நடக்க முடியுமா?
= கல்யாணம் பண்ணினால் இந்தக் காலத்திலே அவங்க விசுவாசமா நடப்பங்களா? யாருடைய பிள்ளைக்கோ நான் தந்தையாகணுமா?
= எனக்கு ஆசைதான். எங்க அம்மா அப்பா பண்ணி வைக்கலேன்னா வேறு என்ன சார் வழி?
=எங்க அக்காவுக்கு இன்னும் கலியாணம் ஆகல. அவளுக்கு ஆகணும்னா வரதட்சணைக்கு ஒரு லட்சமாவது வேணும். எங்கே போக?
= எனக்கு ரொம்பநாளா பொண்ணு தேடறாங்க. இப்பெல்லாம் பொண்ணு கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், அப்படியே கிடைத்தாலும் ஏன் படிப்பு இல்லாட்டி வருமானம் அவங்களுக்கு பத்தமாட்டேங்குது.
= பொண்ணுகளும் எதுக்கு கல்யாணம்னு சொல்லி அலையறாங்க. கல்யாணம் பண்ணினா குழந்தை குட்டின்னு வரும், எதுக்கு ரிஸ்க்? இப்படியே பாய் பிரேண்டோட சுத்திகிட்டே இருந்தாப் போதும்னு நினைக்கறாங்க!
நம் அடுத்த கேள்வி:
உங்களுக்கும் அக்கா, தங்கச்சி எல்லாம் இருக்காங்களே, அவங்க நினைப்பெல்லாம் வரவில்லையா?
= எனக்கு அக்கா தங்கை யாரும் கிடையாது
= எங்க அக்காவுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி மச்சானோடு இருக்காங்க.
= மத்த பொண்ணுகளைப் பார்க்கும்போது அவங்க நினைப்பெல்லாம் வராது.
நீங்கள் செய்த இந்தக் குற்றத்துக்கு பயங்கரமான தண்டனை காத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?
= என்ன பெரிய தண்டனை சார்? மீறி மீறி போனா ஜெயில்லே தானே போடுவாங்க. எல்லோரும் போயிட்டும் வந்துட்டும்தானே இருக்காங்க!
= எங்களை விட பெரிய தப்பு செய்பவனேல்லாம் வெளிலே தானே இருக்காங்க? நாட்டையே ஆண்டுகிட்டு வர்றாங்க.
= உள்ளே போனா பட்டினி ஏதும் போட மாட்டங்கதானே! வெளிலே கஷ்டப் பட்றதுக்கு உள்ளேயே இருந்துட்டு வரலாம்.
= உள்ளே போனாதான் என்ன? எங்கப்பா காசு கொடுத்து வெளிலே கொண்டு வந்து விடுவாங்க!
= நல்ல ஒரு வக்கீல வெச்சா கேஸ் இல்லாம செய்திடலாம்!
= நம்ம இந்தியாலே எது சார் முடியாது?
= கொஞ்ச நாள் தலை மறைவாகி விட்டால் எங்களைப் பிடிக்க முடியாது.
பலவாறு வந்தன பதில்கள். சொல்லித் தீரவில்லை அவர்களுக்கு!

நமது கழுகுப் படை சம்பவத்துக்கு முன்னதாக அந்தக் கல்லூரி மாணவியையும் அவள் நண்பனையும் பேட்டி கண்டிருந்தது.
நீங்கள் திருமணத் தம்பதிகளா?
= இல்லை நண்பர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்,
ஏன் திருமணம் செய்து கொள்வது தானே?
= எதற்கு செய்ய வேண்டும்? இப்படியே இருப்பதில் என்ன தவறு கண்டீர்கள்?
விரும்பும்போது சேர்ந்து கொள்வோம். இல்லையென்றால் பிரிந்து விடுவோம்.
 உங்களுக்கு கருத்தரித்தால் என்ன செய்வீர்கள்?- பெண்ணைப் பார்த்துக் கேட்டோம். பையன் முந்திக் கொண்டு பதில் மழை பொழிந்தான்.
= அது அப்போது பார்க்கலாம். இப்போ நாங்க ஹாப்பியா இருக்கோம். அது உங்களுக்கு பிடிக்கலையா? இருக்கவே இருக்கிறது மருத்துவ மனைகள்! முடிந்த அளவு இல்லாமல் ஆக்கிவிடுவோம். மீறி மீறிப் பிறந்தாலும் அரசுத் தொட்டில்கள் இல்லையா? அனாதைக் காப்பகங்கள் இல்லையா?
உங்கள் பெற்றோர் உங்களிடம் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். உங்களுக்காக மாடாய் உழைக்கிறார்கள். அவர்கள் சம்பாத்தியத்தில் நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா?
= எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் பாய் பிரெண்டை அறிமுகப்படுத்தி இருக்கேன். நாங்க இப்படி ஊர்சுற்றுவது அவங்களுக்கு நல்லாவேத் தெரியும். நான் எப்படிப் போனா அவங்களுக்கு என்ன?
பெண்ணின் பெற்றோரையும் நாம் பேட்டி கண்டோம்
உங்கள் பெண் ஒரு பையனோடு சுற்றிக்கொண்டு இருப்பது தெரியுமா?
= தெரியும் சார், அந்தப் பையனைக் கூட்டிகொண்டு வந்திருந்தாள். இவன்தான் என் பாய் பிரெண்ட்ன்னு சொன்னாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.
 நீங்க ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
= எப்படி எதிர்த்துப் பேச முடியும்? ஏதாவது கேட்டுவிட்டால் வீட்டுக்கே வரமாட்டாள். எதுக்கு வம்புன்னு ஏதும் கேட்கவில்லை என்றாள் தாய்.
= இந்தக் காலத்திலே இதெல்லாம் சகஜம்தானே. அவளும் மெச்சுர் ஆன பெண். படு கூலாக சொன்னார் தந்தை.
பின்விளைவுகளைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா?
= கவலையாத்தான் இருக்கு. நாளைக்கு அவ ஏதாவது குழந்தையைப் பெத்துட்டு வந்தா நாங்கதான் கவனிக்கணும். – தாய்
= எதுக்கு அந்தக் கவலை? முதல்லே குழந்தை உண்டாகாம இருக்கத்தான் பார்ப்பாங்க. அவளுக்கு அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லையா? மீறிமீறிப் பிறந்தாலும் அனாதைக் காப்பகங்கள் இல்லையா? – தந்தை
இன்னும் பேட்டி காண வேண்டிய நபர்கள் பலர் இருந்தாலும் பேட்டிகளைத் தற்காலிகமாக முடித்துவிட்டு திரும்பியது கழுகுப் படை. இதுவரை பேட்டி கண்டவரையில் எல்லோரும் ஏறக்குறைய கவலை இல்லாமல்தான் இருக்கிறார்கள். யாருக்கும் எந்த குற்ற உணர்வும் கிடையாது. எதையும் தாங்கும் இதயத்தோடுதான் இருக்கிறார்கள். பிறகு நாடு ஏதோ கொந்தளித்துப் போய் இருப்பதாகக் கூறுகிறார்களே!... அதுதான் இன்னும் புரியாமல் இருக்கிறது..... ஒருவேளை அதுவும் அடங்கி விட்டதோ?.... சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் எதற்கு? அரசாங்களும் அலுவலகங்களும் சட்ட சபைகளும் பாராளுமன்றங்களும் எதற்கு?... ஒருவேளை அவற்றை மூடிவிட்டால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆரம்பித்துவிடுமோ? ஒன்றுமே புரியவில்லை!
எங்கோ பஸ்சில் போகும்போது வழியில் படித்தது ஞாபகம் வந்தது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக