இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 நவம்பர், 2012

இஸ்லாத்துக்கு எதிரானவை தர்காக்கள்!


 இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம், அறிவியல் பூர்வமான மார்க்கம், அதனுடைய அழகிய போதனைகளின்பால் அறிவாளிகள், படித்தவர்கள், சிந்தனையாளர்கள், ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த குர்ஆனை நேரடியாகப் படித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் கூறும் ஓர் இறைக் கோட்பாடுதான் உண்மையானது என்று உளமாற நம்புகின்றனர்.
 இந்த நிலையில் பூர்வீக முஸ்லிம்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடியவர்களில் பலர் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான இறைக்கோட்பாட்டைத் தகர்க்கும் விதத்தில் ஊருக்குஊர் சமாதிகளைக் கட்டி வைத்து அதற்கு வருடா வருடம் திருவிழாக்கள் நடத்துகின்றனர். சமாதியில் உள்ளவருக்கு எல்லாவிதமான ஆற்றலும் இருப்பதாக நம்புகின்றனர். அவர்களிடத்தில் தங்கள் முறையீடுகளை வைக்கின்றனர். சமாதிகளை மாலை போட்டு மரியாதை செய்கின்றனர் சந்தனம் பூசி மகிழ்கின்றனர். சமாதிகளுக்கு விளக்கேற்றி மரியாதை செய்கின்றனர். சமாதி விழாக்களில் யானைகளையும், கழுதைகளையும் கொண்டு வந்து தெருக்களில் ஊர்வலம் வருகின்றனர். சமாதிகளை சுற்றியிருந்து மவ்லூது என்ற பாடல்களைப் பாடி சமாதியில் உள்ளவரிடம் இறைஞ்சி முறையிடுகின்றனர்.
 சமாதியில் நின்று அழுது புலம்புகின்றனர். சமாதியிலே உண்டியல் வைத்து காணிக்கைகள் போடுகின்றனர். ஊரெல்லாம் வசூல் செய்து சோற்றை சமைத்து பாழ்பட்ட பல கைகளால் பிசைந்து பரகத் என்ற பெயரில் பங்கீடு செய்கின்றனர். இதை புண்ணியம் என நினைத்து மக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
  ஊருக்கு ஊர் சமாதிகள், தக்கலையிலே பீரப்பா, கோட்டாறில் பாவாகாசீம் அப்பா, திட்டுவிளையில் ஹயாத் அப்பா, திருவிதாங்கோட்டில் மலுக் அப்பா,.... இப்படியே அப்பாக்களின் பெயரில் நடத்தப்படுகின்ற திருவிழாக்களில் அரங்கேறுகின்ற காட்சிகள், கோவில்களில் சாமி சிலைகளுக்கு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளிலிருந்து கடுகளவும் வேறுபடாத விதத்தில் அனைத்தையும் அப்படியே சமாதிகளில் பெயர்தாங்கி முஸ்லிம்கள் செய்து கொண்டு, இதுவும் இஸ்லாம் என்று பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
  இவற்றை யார் செய்தாலும் அது நரகப்படு குழியை நோக்கி கொண்டு செல்லும் பாவமாகும்.
  என்றென்றும் உயிரோடு இருக்கின்றவனும் நம்மைப் படைத்து பரிபாலிப்பவனும் ஆகிய  அல்லாஹ்விடம் முறையிடுவதை விட்டுவிட்டு உயிரற்ற கல்லிடமும் மண்ணிடமும் முறையிடுவது இஸ்லாமிய இறைக் கோட்பாட்டிற்கு நேர எதிரானது இதைப் புரிந்துகொள்ளாத காரணத்தினால்தான் இவர்கள் தர்காக்களுக்குச் சென்று ஏமாறுகிறார்கள்.
ஆனால் நம்மைப் படைத்தவனோ தன்னையே நேரடியாக அழைக்குமாறு நமக்கு கற்பிக்கிறான்.  அவன் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தயாராக இருக்கின்றான்
"உங்கள் இறைவன் கூறுகிறான், என்னையே நீங்கள் பிரார்த்தித்து அழையுங்கள், நான் உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். எவர் என்னை அழைத்து வணங்காது பெருமையடிக்கின்றனரோ அவர்கள் சிறுமைபட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 40:61)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக