இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 நவம்பர், 2012

மண்ணறை மர்மங்கள்

Image result for grave islam
 "ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? இதில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான்! மனித ஊகங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்காது உண்மை! 
மரணித்ததும் மனிதன் சென்றடயும் நிலையையே மண்ணறை வாழ்க்கை என்கிறோம். மரணத்திற்குப் பின் மனிதனின் உடலை புதைத்திருந்தாலும் சரி, எரித்திருந்தாலும் சரி, பறவைகளுக்கோ மீன்களுக்கோ உணவாகக் கொடுத்திருந்தாலும் சரி....... மண்ணறை வாழ்வு என்பது ஒவ்வொரு  மனிதனும்  கடந்து செல்லவுள்ள ஒரு கட்டம்!  
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவரது வாழ்நாளிலேயே மண்ணறைக் காட்சிகள் காட்டப்பட்டன. அவரது வர்ணனைகளை கீழே காண்போம்:    
மண்ணறை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்: -
  • மறுமையின் முதல் பிரவேசம் மண்ணறை! ஒருவர் அதிலே மீட்சி அடைந்து விட்டால் அடுத்த நிகழ்வுகள் அவருக்கு சுலபமானதாக இருக்கும். ஒருவர் அதிலே மீட்சி அடையவில்லை என்றால் அவரைத் தொடரக்கூடிய அடுத்து நிகழ்வுகளை அவர் கடினமாக காண்பார். மண்ணறையை விட கொடுரமான ஒரு இடத்தை நான் எப்போதும் கண்டதில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
  • மண்ணறை என்பது சுவர்க்கத்தின் ஒரு தோட்டமாகவோ அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாகவோ இருக்கும்
  • நான் தான் புகழிடத்தின் வீடு! நான் தான் தனிமையின் வீடு!  நான் தான் புழுதியின் வீடு! மற்றும் நான் தான் புழுக்களின் வீடு! என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு இறைவிசுவாசி இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு சாட்டப் பாடுள்ளேன் ;  நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதைப் பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும். 
  • ஆனால் ஒரு நிராகரிப்பாளர் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீர் தாம் மிகவும் வெறுப்புக்குரியவர்! இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன்! நீர் என்னிடம் வந்துவிட்டீர்!  நான் உங்களை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார்ப்பீர்; மலைப்பாம்புகள் அவர்கள் மீது ஏவப்படும்; அந்தப்பாம்பு எப்படிப்பட்டதென்றால் ஒரு பாம்பு இந்த பூமியின் மீது சுவாசித்தால் இந்த உலகம் உள்ளவரை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது; மேலும் அது மறுமைக்காக எழுப்பபடும் நாள்வரை கடித்துக்கொண்டே இருக்கும்
 சமாதிக்குள் நடக்கும் வேதனை குறித்து நபி(ஸல்) அவர்கள அவர்கள் மேலும்  கூறினார்கள்:
இணைவைப்பாளர்களுக்கு கடினமான வேதனை :
அல்லாஹ்வுக்கு சமமாக மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள், மண்ணறையில் கடினமான சோதனையை சந்திப்பார்கள். மண்ணறையில் இறந்தவர்களை அடக்குவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்று நான் பயப்படாமலிருந்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறையில் நடக்கும் வேதனையை கேட்கச் செய்திருப்பேன்
சிறு பாவங்களுக்கும் தண்டனை உண்டு:
நபி (ஸல்) அவர்கள் இரண்டு சமாதிகளை கடந்து சென்ற போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்என்று கூறினார்கள்.
நாளைய இருப்பிடம் காட்டப்படும் :
அடியான் சமாதியில்  அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் (ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்என்றும் இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால், ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்எனக் கூறுவான். உடனே நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதியதுமில்லைஎன்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம் : புகாரி)
மண்ணறை வேதனைகளிலிருந்து இறைவன் நம்மைக் காத்தருள்வானாக! 


http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக